முதலாவது ஆசியக் கிண்ணத்துக்கு முத்தமிட்டது இலங்கை மகளிர் அணி!

9ஆவது மகளிர் ஆசியக் கிண்ண தொடரில், இந்தியாவை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஏழு முறை சம்பியனான இந்திய மகளிர் அணியும் இலங்கை மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஸ்மிர்தி மந்தனா 60 ஓட்டங்களையும் ரிச்சா கோஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில், அதிகப்பட்சமாக கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

ஐந்து முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்த இலங்கை மகளிர் அணி, இம்முறை வாகை சூடி சாதித்துள்ளது.

இலங்கை மகளிர் அணி, சேஸிங் செய்த அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாக இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவானது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்ஸிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் சமரி அத்தபத்து 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.