லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏலம் நாளை !!

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் 420 பேர் ஏலத்திற்காக முன்நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 154 வீரர்கள் இலங்கை வீரர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அணிகளின் உரிமையாளர்களும் வீரர்கள் ஏலத்திற்காக 5 இலட்சம் டொலர் வீதம் 2.5 மில்லியன் டொலர்களை பயன்படுத்தவுள்ளனர்.

ஒவ்வொரு அணியும் தற்போது ஒப்பந்தம் செய்துள்ள, தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்தமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற கண்டி அணி வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, ப்ளெச்சர், கெயில் மெயர்ஸ் ஆகியோரை தக்க வைத்துள்ளது.

இதேவேளை 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ் அணி குசல் மெண்டிஸ், அவிஸ்க பெர்ணான்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், அமதுல்லா ஒமர்சாய், நூர் அஹமட்ஆகிய வீரர்களை தக்க வைத்துள்ளது.

கொழும்பு அணி, சாமிக கருணாரத்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்கிரம, நிபுன் தனஞ்சய, க்ளேன் பிளிப்ஸ் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

இதேநேரம் தம்புள்ளை அணி தில்ஷான் மதுஷங்க, நுவான் துஷார, துஷான் ஹேமந்த, பிரவீன் ஜயவிக்கிரம, முசுதபிசூர் ரகுமான், இப்ராஹிம் சத்ரன் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

காலி அணி பானுக ராஜபக்ஷ, லசித் குருஸ்புள்ளே, நிரோஷன் டிக்வெல்​ல, மஹீஷ் தீக்‌ஷன, டீம் சைபேர்ட், அலெக்ஸ் ஹீல்ஸ் ஆகியோரை தக்க வைத்துள்ளது.

மிகவும் எதிர்பார்ப்பு மிக்க லங்கா பிரிமியர் லீக் தொடரின் ஐந்தாவது பதிப்பு ஜூலை 1 முதல் 21 வரை தம்புள்ளை, பல்லேகலை, கொழும்பு ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகின்றது.

இந்நிலையில் இதற்காக நாளை நடைபெறும் வீரர்களுக்கான ஏலத்திற்கு வியூகங்களை வகுத்து ஐந்து அணிகளும் தயாராகியுள்ளன.