மூன்று வருடங்களின் பின்னர் நாலாயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் – ஜனாதிபதி ரணில்

மூன்று வருடங்களின் பின்னர் இந்த ஆண்டில் நாலாயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கௌரவமான தொழிலான ஆசிரியத் தொழிலின் மரியாதையை அழிக்கும் வகையில் ஒருபோதும் செயற்படக் கூடாது

என தெரிவித்த ஜனாதிபதி, ஆசிரியர்கள் எப்பொழுதும் பாட அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், இதன் மூலம் மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்க பங்களிப்பு செய்ய வேண்டும்.

அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதில் பெற்றோரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலைப் போன்றே ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. அதனால்தான் ஆசிரியர் தொழில் உயர் தொழிலாகக் கருதப்படுகிறது. அந்த மரியாதையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று 2300 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகிறது. மேலும் 700 நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. வெற்றிடங்களுக்கு ஏற்ப மேலும் 1000 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த வருடத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளது”