33 வீத சம்பள உயர்வுக்கு ஜீவன் தொண்டமான் மறுப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன. இதனை ஏற்கமுடியாது. 1,700 ரூபாய் அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர், அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் தொழில் அமைச்சில் (27) நேற்று நடைபெற்றது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் “ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்க கம்பனிகள் முன்வந்துள்ளன. எனினும், இதனை ஏற்கமுடியாது என அனைத்து தொழிற்சங்கங்களும் தெரிவித்தன.

1,700 ரூபாயையே கோரினோம். அந்த தொகையில் உறுதியாக நிற்கின்றோம் என தெளிவாக எடுத்துரைத்தோம். சம்பள நிர்ணய சபையை கூட்டுவதற்கு தொழில் அமைச்சர் ஒப்புகொண்டுள்ளார். ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும். நாட்கூலி முறைமை பொருத்தமற்றது.

எனவே, நிரந்தரமானதொரு தீர்வை நோக்கி நகர வேண்டும். அந்த நிரந்தர தீர்வை அடைய காலம் எடுக்கும். அதுவரை ஆயிரம் ரூபாவிலேயே இருக்க முடியாது. அதனால்தான் 1,700 ரூபாய் கோருகின்றோம். ஒரு குடும்பமொன்று 3 வேலைகள் சாப்பிட்டு வாழ வேண்டுமெனில் 76 ஆயிரம் ரூபாய் அவசியம்.

ஆனால் பெருந்தோட்ட பகுதிகளில் சராசரி வருமானம் 42 ஆயிரமாக உள்ளது. இதனை ஏற்கமுடியாது. அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியல் செய்யாமல், ஒற்றுமையாக இருந்தால் தீர்வை அடையலாம்”என் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *