IPL தொடரில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர் !

ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது பருவம் எதிர்வரும் 22 ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில் டெல்லி கப்பிடல்ஸ் அணியால் 4 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து இளம் வீரர் ஹரி புரூக் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்த நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து விலகுவதாக கடைசி நேரத்தில் ஹரி புரூக் அறிவித்துள்ளமையானது டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதில்லை என்ற கடினமான முடிவை நான் எடுத்துள்ளதை உறுதி செய்கிறேன். டெல்லி கப்பிடல்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட நான் அங்கு சென்று விளையாடுவதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். இந்த முடிவிற்கான காரணம் என்ன என்று பலரும் கேட்பார்கள் என்பது தெரியும். எனவே அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த மாதம் என்னுடைய பாட்டியை நான் இழந்தேன். அவர் எனக்கு ஆதரவாக இருந்தவர். குழந்தைப் பருவத்தின் பெரும் பகுதியை அவருடைய வீட்டில் கழித்தேன். என்னுடைய வாழ்க்கையின் அணுகுமுறை மற்றும் கிரிக்கெட் வாழ்க்கையை அவரும் என்னுடைய மறைந்த தாத்தாவும்தான் வடிவமைத்தனர்.

இங்கிலாந்துக்காக நான் விளையாடியதை அவர் பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டில் நான் வென்ற சில விருதுகளை அவர் சேகரித்து மகிழ்ச்சியுடன் இருந்தது எனக்கு பெருமையானதாகும்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *