சுதந்திரதினம் கரிநாள் : அனைத்து தமிழர்களும் ஒன்றிணையுங்கள் – சிறீதரன் அழைப்பு

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதோடு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பூர்வீக மண்ணில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பை நிலைநிறுத்த, அரச கட்டமைப்புகளுக்கும் எதிராக எல்லாவழிகளிலும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்களது அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், மக்களின் குரலாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் போராட்டத்தில் அரசியல் கட்சி, கொள்கை வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவரையும் தமிழர்களை இறைமையுள்ள தேசிய இனமாக இலங்கைத் அங்கீகரிக்காதவரை, இந்த நாட்டின் சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாளே என்றும் சி.சிறீதரன் கூறியுறள்ளார்.