2024 பொதுத் தேர்தல் திகதிக்கு எதிராக மனு தாக்கல்

எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது என தீர்ப்பளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளர் எச். எம். பிரியந்த ஹேரத்தினால் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள், சட்ட மாஅதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி ஒக்டோபர் 04 முதல் 11 வரை நிர்ணயிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், ஏழு வாரங்களுக்கு மிகாமலும் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வேட்புமனுவை ஏற்கும் பணி முடிவடைந்த 11 ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29 ஆம் திகதியும் நிறைவடைவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதி, அந்த காலப் பகுதியில் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தவறு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தவறின் மூலம் மக்களின் இறையாண்மையும், அரசியலமைப்பும் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்க வேண்டும் என மனுதாரர் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.