பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் பேச்சு

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வாரம் இலங்கை வந்திருந்த பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளராக இந்த ஆண்டு ஜனவரியில் இந்திரா மணி பாண்டே பதவியேற்றதைத் தொடர்ந்து, கடந்த 07 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை 6 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கை வந்திருந்தார்.

பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், ஜனாதிபதியோடும் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தும் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதேநேரம் லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “பிம்ஸ்டெக் மூலம் பிராந்திய ஒத்துழைப்பு” என்ற நிகழ்ச்சியில் பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் பாண்டே பங்கேற்றிருந்தார் என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை – இந்தியா, தாய்லாந்து – மியான்மர், இலங்கை – தாய்லாந்து என பிம்ஸ்டெக் நாடுகளிடையே இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் உள்ளபோதும் உள்ளக மற்றும் பிராந்தியங்களுக்கு இடையில் அந்நியச் செலாவணியை செயற்படுத்த எவ்வித உடன்பாடுகளும் செய்யப்படவில்லை.