சிறைக் கைதிகளின் பங்களிப்பின் மூலம் 116 மில்லியன் ரூபா வருமானம் ய்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் புதிதாக 107 சட்டமூலங்கள் மற்றும் சட்டத் திருத்த முன்வரைவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறை மூலம் 116 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம் தண்டனைக் காலத்தை நிறைவு செய்வதற்கான வாய்ப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன குறிப்பிட்டார்.

மேலும், போதைக்கு அடிமையாகி சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முறையான மறுவாழ்வு வழங்கவும் திறன் அபிவிருத்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சமூக சீர்திருத்தக் கட்டமைப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். 2023 ஆம் ஆண்டில், 14,026 பேர் அந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். 2024இல் இந்த எண்ணிக்கை 15,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான 22 கட்டிடங்களும் 22 ஏக்கர் காணியும் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா பிரதேசத்தில் 06 ஏக்கர் காணி பெண்களுக்கான ஒருங்கிணைந்த புனர்வாழ்வு நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதித்துறை மற்றும் பொதுமக்களுடனான உறவை வளர்க்க, கிராம சேவகர் பிரிவுகளில் நல்லிணக்கக் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் சர்வமத ஆலோசனைக் குழுக்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் சுகாதார அமைச்சுடன் இணைந்து பல கூட்டு வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தொற்று நோய்களுக்காக ஒதுக்கப்பட்ட மட்டக்களப்பு மாந்தீவை சிறைச்சாலை திணைக்களத்திடம் ஒப்படைக்க சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அதை மறுவாழ்வு மற்றும் விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.