பிரதமரின் உரையால் உச்சநீதிமன்ற உத்தரவை செல்லுபடியற்றதாக்க முடியாது சட்டத்தரணிகள் !!!

நாடாளுமன்றத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரையினால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியாக்காது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாத அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள், நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் நியமனம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, அமைச்சரவையின் செயற்பாடுகள் தொடர்பிலும் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்த நேற்று சட்டத்தரணிகள் சங்கம் ஊடக சந்திப்பையும் ஏற்பாடு செய்திருந்தது.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபரின் கடமைகளையும் பொறுப்புக்களையும் தொடர முயற்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக அமையும் என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அரசியலமைப்புச் சபையின் தீர்மானத்திற்கு எதிராக உத்தரவைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று சில தரப்பினர் முன்வக்கும் கருத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகளை உச்ச நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்த முடியாது என பிரதமர் கூறியது தவறானது என்றும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் தீர்மானங்களை அடிப்படை உரிமை மீறல் மனுவின் மூலம் சவால் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *