டெல் அவிவ் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்

இஸ்ரேல் நகரமான இஸ்ரேலின் டெல் அவிவ் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானத் தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு யேமனின் ஹூதி போராளிகள் குழு பொறுப்பேற்று சமூக ஊடகங்களில் பதிவை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமது நகரில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்திற்கு அருகே நடந்த பாரிய வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

மேலும் வான்வழி இலக்கை இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏன் செயற்படவில்லை என்பது தொடர்பாகவும் இஸ்ரேல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேநேரம் வான்பரப்பில் மேற்கொள்ளப்படும் விசேட ரோந்து பணிகளை அதிகரித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.