2024 இல் பொது தேர்தலை நடத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு இல்லை !!

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 975 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 2023 ஓகஸ்ட் மாதம் 10 பில்லியன் ரூபாய் கோரிக்கையை முன்வைத்ததாகவும், 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் எனில் இதேபோன்ற ஒரு ஒதுக்கீடு அவசியம் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இதேநேரம் இரண்டு தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த வருடம் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.