ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விமானம் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பான நீதிமன்ற வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி ரஷ்ய விமானங்கள் தொடர்பான நெருக்கடியை தூதரக மட்டத்தில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் கருத்து வெளியிட்டார்.
குறித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டமையினால் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்படவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏ330 ரக விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தது.
அயர்லாந்து விமான நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி, தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தடை உத்தரவை நீக்குமாறு ஏரோஃப்ளோட்டின் கோரிக்கையை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் புதன்கிழமை பரிசீலிக்கவுள்ள நிலையில் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானங்களை தற்காலிகமாக நிறுத்த அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.