CID விசாரணைகள் முடியும் வரை வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்கும் வகையில், காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
மே 9 வன்முறையைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிகளாகவும் முறைப்பாட்டாளர்களாகவும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையாகியுள்ளனர்.
இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கையை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை அடையாளம் காணும் போது சாட்சிகள் நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சாட்சிகள் இல்லை என்றால் சந்தேக நபர்கள் இருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சாட்சிகளாக வரத் தயாராக இருக்கும் மற்றவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்றும் எவ்வாறாயினும் இந்தத் தடையை நீக்கக் கோரி இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக போராட்டக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பொன்றில் பேசிய கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஜீவந்த பீரிஸ் மற்றும் தம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோர் அடக்குமுறையை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
“கடந்த 46 நாட்களாக நாங்கள் கோட்டாபய-ரணில் அரசாங்கத்தை தோற்கடித்து புதிய ஆட்சி யுகத்தை ஏற்படுத்துவதற்காக காலி முகத்திடல் மைதானத்தில் ஒன்று கூடியுள்ளோம்.
ஆனால் மே 9 அன்று, அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கும்பல் இரக்கமின்றி எதிர்ப்பாளர்களைத் தாக்கியது. இதன் விளைவாக பொதுமக்கள் தெருக்களில் இறங்கி, இந்தத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வரவழைக்கப்படுகிறார்கள்.
பல வழிகளில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 14 பேருக்கும் மேல் அவர்களது கடவுச்சீட்டை ஒப்படைப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கிறோம். கோட்டாபய-ரணில் அரசாங்கத்தை தோற்கடிக்கும் வரை இந்த போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.