வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் போராட்டக்கற்கள் மீதான தாக்குதலை அடுத்து அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமன்ன மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷ, தேசபந்து தென்னகோன், மஹிந்த கஹந்தகம மற்றும் பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு வேறு வழக்கு விசாரணை ஒன்றுக்காக பயணத்தடை விதிக்கப்பட்ட சனத் நிஷாந்தவின் கடவுச்சீட்டு நீதிமன்றில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரேணுகா பெரேரா ஆகியோர் தமது கடவுச்சீட்டுகள் அழிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.