பிரதமருக்கு 117 பேர் ஆதரவு உறுதியானது: அனைத்து கட்சிகளுடனான சந்திப்பு பிற்போடப்பட்டது
1 min read
ஜனாதிபதி மாளிகையில் இன்று (29) முற்பகல் நடைபெறவிருந்த அனைத்து கட்சிகளுடனான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் சுயாதீனமாக செயற்பட்ட குழுவுடன் மாத்திரம் ஜனாதிபதி இன்று கூடி கலந்துரையாடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் குறித்து கலந்துரையாடும் வகையில் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஆளுங்கட்சி சார்பாக 109 உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதாகவும் பிரதமருக்கு 117 பேர் ஆதரவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சந்திப்பில், புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவும் பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய டலஸ் அலகப்பெருமவும் கலந்துகொண்டார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காட்டுபவர்களுக்கு அரசாங்கத்தை ஒப்படைப்பதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அத்தோடு மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு தாம் கோரவில்லை எனவும், அவர் பிரதமராக நீடிக்க முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.